
மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்காக மும்பையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் மும்பை, தாராவி உள்ளிட்ட சில பகுதிகளில் பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்காக மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் நோய் பரவுதலை கட்டுப்படுத்த மாநில அரசும் முயற்சி செய்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலத்தில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் சிறப்பு சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, மும்பையின் பைகுல்லா (கிழக்கு) பகுதியில் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் இது ஜூன் இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என மும்பை மாநகராட்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 1000 படுக்கை வசதிகளில், 300 படுக்கைகள் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும்.
இந்த அறையில் சிகிச்சையளிக்க 50 மருத்துவர்கள் , 100 செவிலியர்கள் மற்றும் 150 உதவியாளர்கள் உட்பட மொத்தம் 500 சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். இது தவிர ஆம்புலன்ஸ் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களும் அதிகாரிகளால் கிடைக்கும். இந்த மருத்துவமனையை 15 முதல் 20 நாட்களில் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது டில்லியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கும் 10,000 படுக்கை வசதியுடன் மருத்துவமனை உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.