
தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரத்து செய்வதாக, வட கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த 1950களில் நடந்த கொரியப் போரின் போது, வட கொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது. அங்கு, இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ல் இரு நாடுகளும் இடையே பேச்சு வார்த்தை துவங்கிய பின், அந்த தகவல் தொடர்பு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. 'வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும்' என, 2018ல் இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடந்த உச்சி மாநாட்டில் தென் கொரியா உறுதியளித்தது. ஆனால், சமீபத்தில் பலூன் பிரசுரங்கள் வட கொரிய எல்லைக்கு வந்துள்ளன.
இதனால் கடும் கோபமடைந்த, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங், 'ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளோம். கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும்' என, இரு வாரங்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி, கேசாங் நகரில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் தங்கள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வருவதாக வட கொரிய ராணுவம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
ரத்து அல்ல... ஒத்திவைப்பு!
இந்நிலையில், கிம் ஜோங் உன் தலைமையில் இன்று (24ம் தேதி) நடந்த கூட்டத்தில், இந்த ராணுவ நடவடிக்கையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாக, வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், 'தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வடகொரியா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. ரத்து செய்யவில்லை' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.