Type Here to Get Search Results !

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்க அனுமதி தாமதப்படுத்தும் இந்தியா நடவடிக்கை

சீன பொருட்களுக்கான கட்டுப்பாடு ...

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்க அனுமதியை தாமதப்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கை, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென கூறப்படுகிறது.

லடாக் எல்லையில் அத்துமீறிய சீன படையுடன் ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தனிநபர் பராமரிப்பு, பர்னிச்சர், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது.

2019ம் ஆண்டின் மொத்த விற்பனை மதிப்பு அடிப்படையில், இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையில் இந்த குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை மட்டும் 51 சதவீதம் பங்கை கொண்டுள்ளன. அதில், ஸ்மார்ட்போன்கள் 35 சதவீதம், நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 7 சதவீதம், வீட்டு உபயோக பொருட்கள் 4 சதவீதம், பொம்மைகள் 2 சதவீதமும் அடங்கும். பெயர் குறிப்பிடாத விரும்பாத அதிகாரி ஒருவர், விநியோகத்தை கட்டுப்படுத்துவதால் மட்டும் சீன பொருட்களை முற்றிலும் அழித்துவிட முடியாது என கூறியுள்ளார்.

மேலும், சமூகவலைதளம் மூலம் விற்பனை செய்யும் மீசோ, ஷாப்101, பல்புல் மற்றும் சிம்சிம் போன்ற சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை பொருட்களை சார்ந்துள்ளன. ‛ரூ.300க்கும் குறைவான விலையில் குறைந்தது 60 முதல் 70 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து வருகின்றன. அந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திறன் இந்தியாவுக்கு இல்லை' என முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விநியோகத்தை தடை செய்வது, ஆன்லைன் வணிகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சில்லறை விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆன்லைன் வணிகத்தில் சில பொருட்களை சார்ந்திருப்பதில், குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் சந்தையில், சில்லறை விற்பனை கடைகளை விட ஆன்லைன் விற்பனை கடைகளில் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களைப் பாதிக்கும். ஏனெனில் குறிப்பிட்ட சில தயாரிப்புகள் அல்லது அதன் மூலப்பொருட்கள் கிடைக்காது அல்லது போதிய அளவு உள்நாட்டில் இல்லாததே காரணமென தெரிவித்துள்ளார்.