Type Here to Get Search Results !

துபாயில் வசித்த இந்திய தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை, கொலை செய்த பாகிஸ்தானியரை 24 மணி நேரத்தில் கைது



துபாயில் வசித்த இந்திய தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை, கொள்ளை முயற்சியின் போது கொலை செய்த பாகிஸ்தானியரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக துபாய் போலீசின் குற்ற வழக்கு விசாரணை துறை தலைவர் பிரிகேடியர் ஜமால் அல் ஜலாப் கூறுகையில், துபாயில் உள்ள 'வில்லா' ஒன்றில் இந்தியாவை சேர்ந்த ஹிரன் ஆதியா, மனைவி வித்தி ஆதியா மற்றும் 18 மற்றும் 13 வயதுடைய மகள்களுடன் வசித்து வந்தார். இவர் நிறுவனம் ஒன்றின் நிர்வாக மேலாளராக உள்ளார். கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். முதலில், 2,000 திர்ஹாம்( இந்திய மதிப்பில் ரூ.41,229) இருந்த பர்சை திருடியுள்ளார். தொடர்ந்து வீட்டில் விலை உயர்ந்த பொருள் உள்ளதா என தேடியுள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். இதனை கண்ட, குற்றவாளி இருவரையம் அடித்து கொன்றார். சத்தம் கேட்டு வந்த 18 வயது மகள் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றார். கழுத்தில் லேசான காயமடைந்த அவர், போலீசுக்கு தகவல் அளித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், வீட்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்து, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறும் போது, குற்றவாளி திட்டமிட்டே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பராமரிப்பு பணிக்காக கடந்த ஒராண்டிற்கு முன்பு அந்த வில்லாவுக்கு சென்ற அவர், நிறைய பணம் வைக்கப்பட்டதை பார்த்துள்ளார். இதனால், அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டு சென்றுள்ளார். கத்தியையும் கொண்டு சென்றார் என தெரிவித்தார்.

இந்திய தூதரக அதிகாரி விபுல் கூறும் போது, இந்த சம்பவம் எதிர்பாராதது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.