
1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது: 1,482 நகர கூட்டுறவு வங்கிகள், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், இந்த வங்கிகளுக்கும் பொருந்தும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1,540 கூட்டுளவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், அதில் ரூ.4.84 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள 8.6 கோடி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். உ.பி.,யின் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.