Type Here to Get Search Results !

டிரம்ப், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் சரணடைந்து விட்டார்

கொரோனாவிடம் சரணடைந்த டிரம்ப்: ஜோ ...

அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் சரணடைந்து விட்டார் என அவரை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 22.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் டிரம்ப், முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதற்காக கொரோனா பரவலுக்கு மத்தியிலும் குடியரசு கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் இன்னும் பிரசாரத்தை துவக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா விவகாரத்தில் டிரம்ப் மீது ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: அதிபர் டிரம்ப் கொரோனாவிடம் சரணடைந்து விட்டார். அமெரிக்க மக்கள், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக நிறைய தியாகம் செய்துள்ளனர். அமெரிக்க பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு செல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தவறிவிட்டார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை திறப்பதிலும், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்வதிலும் தான் டிரம்ப் ஆவலாக இருக்கிறார். அவர் போர்க்கால அதிபரை போல செயல்பட விரும்புகிறார். தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அவர் வெள்ளைக் கொடியை அசைத்து பின்வாங்குகிறார். இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.