
இந்திய - சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுதை அடுத்து இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு ரகசியமாக வந்து ஆய்வு நடத்திய தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளது.
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளது. கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்னை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.