பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகனப் பேரணி மூலம் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக பா.ஜ.க.வும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பா.ஜ.க.வின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, திமுக, இந்திய கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரதமர் மோடி வரும் 9ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தவும், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, நீலகிரி, பெரம்பலூர், வேலூர் தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
AthibAn Tv