செந்தில் பாலாஜி வரும் 25ம் தேதி காணொலி காட்சியில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.இது 34வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவல் முடிந்ததும் ஏப்ரல் 25ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், அசல் ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் ஓரிரு நாட்கள் வாதங்கள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv