கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் யாரும் வராதவாறு சுற்றுலா மைய வழிப்பாதைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் கன்னியாகுமரி கடல் 3 தினங்களாக உள்வாங்கியவாறே இருந்தது. நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கம், கடற்கரை பகுதிகளில் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் நேற்று மாலை திடீரென வழக்கத்தைவிட அதிக அளவில் கடல் உள்வாங்கியது. விவேகானந்தர் பாறை, திருள்வள்ளுவர் சிலைக்கான படகு தளத்தில் கடல் நீர்மட்டம் 5 அடி வரை கீழே இறங்கியது. அதே நேரத்தில் முக்கடல் சங்கமத்தில் சற்று தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால், கடல் பாறைகள் எப்போதும் இல்லாத அளவில் அதிகமாக வெளியே தெரிந்தன. அவற்றில் கடல் குச்சிகள், நத்தைகள் அதிக அளவில் இருந்தன.
இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் ஆர்வமிகுதியில் கடலில் இறங்கி கடல் பாறைகளில் ஒட்டியிருந்த கடல் குச்சிகளை துணிகளில் சேகரித்தனர். இதனால் அங்கு நின்ற போலீஸார் மீனவர்களை கரைக்கு வருமாறு எச்சரித்தனர். அப்போது கடல் குச்சிகளை அதிகமாக சேகரித்த மீனவர்கள் உற்சாகத்துடன் கரைக்கு வந்தனர். கன்னியாகுமரி கடலில் நேற்று வழக்கத்தைவிட ஏற்பட்ட இந்த கடல் நிலையின் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.
AthibAn Tv