
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு, உடல் பாதுகாப்பு கவசம், தடிகள் வழங்க, ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே, சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது சீன ராணுவத்தினர், நம் வீரர்களை, கற்கள், முள் கம்பிகள், இரும்புத்தடிகள் ஆகியவற்றால் தாக்கியுள்ளனர். இதில் தான், நம் வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இதையடுத்து, லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, உடல் பாதுகாப்பு கவச ஆடைகள் வழங்க, ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம், குறைந்த எடையில், 2,000 உடல் பாதுகாப்பு கவச ஆடைகளை தயாரிக்க, ராணுவம் சார்பில், 'ஆர்டர்' கொடுக்கப்பட்டு உள்ளது. இதில், 500 ஆடைகள் உடன் வழங்கப்பட உள்ளன. மேலும், வீரர்களுக்கு தடிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.