Type Here to Get Search Results !

இந்திய - சீன எல்லையில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ரகசியமாக வந்து ஆய்வு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது

latest tamil news

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுதை அடுத்து இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு ரகசியமாக வந்து ஆய்வு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய - சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சீன ராணுவத்தினர் கொடூரமாக தாக்கியதில் நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 76 வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீன தரப்பில் 43 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய விமானப் படை தளபதி பதவுரியா கடந்த இரண்டு நாட்களாக காஷ்மீரின் லே, ஸ்ரீநகர் பகுதிக்கு ரகசியமாக வந்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

லே மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் ஏற்கனவே இந்திய விமானப் படையின் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய - சீன எல்லையில் விமானப் படையினரை தயார் நிலையில் வைப்பதற்காக விமானப்படை தளபதி ஆய்வு நடத்தியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே 'காஷ்மீரில் இந்தியா - பாக். எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலுக்கும் இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாக். ராணுவத்தினர் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நம் ராணுவம் பதிலடி கொடுத்ததும் அவர்கள் பின்வாங்கிச் செல்வதும் வழக்கமாக நடப்பது தான் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.