
லடாக்கில், சீன ராணுவத்துக்கு எதிராக நடந்த மோதலில் தைரியமாக போரிட்டு, காயமடைந்த வீரர்களை, ராணுவ தலைமை தளபதி நரவானே சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.
லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த, 15ம் தேதி இரவு, இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 70 வீரர்களுக்கு மேல் காயம் அடைந்தனர். அவர்கள், லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், லடாக் எல்லை பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ராணுவ தலைமை தளபதி, நரவானே, இரண்டு நாள் பயணமாக சென்றார். அங்கு, மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.சீன ராணுவத்துக்கு எதிராக, தைரியமாக போரிட்டதற்காக, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, லடாக் எல்லையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நரவானே, சீன ஊடுருவலை தடுக்க, கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும் என, கேட்டு கொண்டார். சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்தால், அதற்கு பதிலடி கொடுக்கவும், ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டார்.