
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழகம் முழுதும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, நோய் பரவல் அதிகம் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், வாகன போக்குவரத்துக்கும், கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க, 19ம் தேதியில் இருந்து, வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று (ஜூன் 24) முதல், 7 நாட்களுக்கு மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட, பல மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே, அந்த மாவட்ட நிர்வாகங்களும், முழு ஊரடங்கு அறிவிக்கும்படி, அரசிடம் கோரியுள்ளன. இந்த சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா நோய் பரவல் நிலை, பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.