Type Here to Get Search Results !

இந்திய வீரரும், எங்கள் ராணுவத்தினரின் பிடியில் இல்லை' என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

latest tamil news

இந்திய வீரர்கள், 10 பேரை, சீன ராணுவம் நேற்று விடுவித்ததாக கூறப்பட்ட நிலையில், 'இப்போதைக்கு எந்த ஒரு இந்திய வீரரும், எங்கள் ராணுவத்தினரின் பிடியில் இல்லை' என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் நிலவிய பதற்றம், 15ல், உச்சக்கட்டத்தை அடைந்தது. காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இரு தரப்பு வீரர்களும் கடுமையாக மோதினர்.இரும்புத் தடி, முள்கம்பி ஆகியவற்றால், சீன ராணுவத்தினர், இந்திய வீரர்களை கொடூரமாக தாக்கினர். இதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும், 43 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சீன ராணுவம், இதுவரை அந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

இந்த மோதலின் போது, இந்திய வீரர்கள் சிலரை, சீன ராணுவம் பிடித்துச் சென்றதாகவும், அவர்களை துன்புறுத்துவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, எல்லையில் போர் பதற்றம் நிலவியது.

இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகளும், துாதரக அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.இந்த தொடர் பேச்சின் அடிப்படையில், தங்கள் பிடியிலிருந்த இந்திய வீரர்கள், 10 பேரை, சீன ராணுவம் நேற்று விடுவித்ததாக, தகவல் வெளியானது.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ராணுவ உயர் அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:இப்போதைக்கு, எந்த ஒரு இந்திய வீரரும் எங்கள் ராணுவத்தின் பிடியில் இல்லை. சீன வீரர்கள், இந்திய ராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்பது குறித்து எனக்கு எதுவும் தகவல் இல்லை.எல்லையில் பதற்றத்தை குறைக்க, இரு தரப்பிலும், துாதரக ரீதியிலும், ராணுவ அதிகாரிகள் அளவிலும் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார். சமீபத்தில், நம் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின் போது, இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை' என, தெரிவித்திருந்தார்.தற்போது, 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாக வெளியான தகவல், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.