
'எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் சோனியா டீம், வாத்ரா மற்றும் காங்., கட்சி தொடர்ந்த போலி வழக்குகள்' என, ரிபப்ளிக் டிவி சேனல் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசார் நடத்திய விசாரணைக்கு பின் தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, 'ரிபப்ளிக்' என்ற தனியார் ஆங்கில செய்தி, 'டிவி' சேனலில் நடந்த விவாதத்தின்போது, காங்., தலைவர் சோனியாவுக்கு எதிராக கருத்து கூறியதாக, அந்த சேனலின் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், மூன்று, எப்.ஐ.ஆர்., மற்றும் 11 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக, மும்பை என்.எம். ஜோஷி மார்க் போலீசார் முன்பு நேற்று முன் தினம்(10ம் தேதி) அர்னாப் கோஸ்வாமி ஆஜரானார்.
கடந்த 40 நாட்களில் 2வது முறையாக அவர் மும்பை போலீசார் முன்பு ஆஜராகிய நிலையில், அவரிடம் சுமார் 2 மணி நேரம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக 12.5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், ரிபப்ளிக் டிவி சி.எப்.ஓ., சுந்தரத்திடம், போலீஸ் ஸ்டேஷனுக்குள் சுமார் 4 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் அர்னாப் தெரிவித்தார்.
விசாரணைக்கு பின், செய்தியாளர்களிடம் அர்னாப் தெரிவிக்கையில், 'இந்த வழக்குகள் அனைத்தும் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக சோனியாவின் டீம், வாத்ரா மற்றும் காங்., கட்சியால் இட்டுக்கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்ட போலியான வழக்குகள். பாந்த்ரா வழக்கில் பின்னால் நடந்த சதித்திட்டம் பற்றிய உண்மைகளை நாங்கள் வெளிக் கொண்டு வந்தோம்.
சதித்திட்டத்தை வெளிக் கொண்டு வந்ததற்காக, மஹாராஷ்டிரா வழங்கிய பரிசு இது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து உங்களது 'ஜர்னலிசத்தை' விளக்க சொல்கிறார்கள். என் பக்கம் தான் உண்மை உள்ளது. எங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
அர்னாப் மீது தொடரப்பட்ட இரு வழக்குகள்:
* 2020, ஏப்.,20ல் தனது டிவி விவாதத்தின் போது, பால்கர் கொலை சம்பவம் குறித்து ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
* கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே அதிகளவு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கூட்டியதில் தொடர்பு.
இந்த இரு குற்றச்சாட்டுகளின் படி, அர்னாப் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 பி , 153, 153 ஏ, 295 ஏ, 500 மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.