
தந்தை, மகன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என கூறிய குடும்பத்தினர், இருவரது உடல்களையும் வாங்க மறுத்துவிட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்தவர் ஜெயராஜ் 60, அவரது மகன் பென்னிக்ஸ் அங்கு அலைபேசி கடை நடத்திவந்தார்.
கடந்த 19ம் தேதி இரவில் அங்கு ரோந்து சென்ற போலீசார் ஊரடங்கு காரணமாக அவர்களை கடைகளை அடைக்ககூறினர். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே போலீசார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று இரவில் கடுமையாக தாக்கினர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கோவில்பட்டி
கிளைசிறைக்கு அனுப்பினர். கடுமையான தாக்குதலால் பென்னிக்ஸ் ரத்தவாந்தி எடுத்துள்ளார். ஜெயராஜ்க்கு ஆசனவாயில் இருந்து ரத்தம் வழிந்தது. ஆரம்பத்தில் கிளை சிறை அதிகாரிகள் இருவரையும் சிறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இருப்பினும் மேலிட பிரஷரால் சிறையில் அடைத்தனர். 22ம் தேதி இரவில் சிறையில் பென்னிக்ஸ் இறந்தார்.
23ம் தேதி காலையில் 5:30 மணிக்கு ஜெயராஜ் இறந்தார். தந்தை,மகன் இறப்பால் சாத்தான்குளத்தில் பதட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உடல்வாங்க மறுப்பு:
நேற்று இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன்,
ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் மகள் பெர்சி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 3 மணிநேரம் விசாரணை மேற்கொண்டார். முறைப்படி இருவரது உடல்களையும் அடையாளம் காட்டினர். டாக்டர் செல்வமுருகன் தலைமையில் 3 டாக்டர்கள் குழுவினர் இரவில் பிரேதபரிசோதனை மேற்கொண்டனர்.
நேற்று இரவு 8 மணிக்கு மேல் துவங்கி 11. 30 மணிக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்தது. இருப்பினும் ஜெயராஜ் குடும்பத்தினர் அவர்களது உடல்களை வாங்கமறுத்தனர். இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். எங்களுக்கு அரசு வேலையோ, நிவாரண தொகையோ முக்கியமல்ல. அத்துமீறி நடந்த போலீசார் மீது இரட்டை கொலை வழக்குபதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதுவரையிலும் இருவரது உடல்களயும் பெற மாட்டோம் என மறுத்தனர்.
அங்கு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா, சமுதாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் கூடியிருந்தனர்.
கடையடைப்பு:
வியாபாரிகள் இருவர் இறப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போலீசை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் திருநெல்வேலி கோர்ட் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டு:
தற்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கும் எஸ்.ஐ.,பாலகிருஷ்ணன், இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பணியில் இருந்தார்.
அப்போது கணவர் மீது புகார் கொடுக்க வந்த வடக்கன்குளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் கிளம்பியது. எனவே அவர் அங்கிருந்து துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.
ரகு கணேஷ் மீதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவோரை லத்தியால் கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்துவார் என்ற புகார் உள்ளது.பென்னிக்ஸ் அலைபேசி கடையில் ஒரு போன் கேட்டு போலீஸ் தரப்பில் நச்சரித்துள்ளனர். இலவசமாக அலைபேசி போன் தராததால்தான்,
முன்விரோதத்தில் அவர்களை அழைத்துச்சென்று பழிவாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.