
'சரியான பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளால், நம் நாட்டில், 'கொரோனா'வால் உயிரிழப்பு ஏற்படுவது குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஒரு லட்சம்மக்கள் தொகைக்கு, சராசரியாக, 6.04 பேர் உயிரிழந்துள்ளனர். நம் நாட்டில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டில் சரியான பரிசோதனை, பாதிக்கப்பட்டோருடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் திறம்பட செய்யப்பட்டு வருகிறது. அதனால் தான், உலக அளவில், பலி எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளோம்.உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, உலகெங்கும் பலியாவோர் எண்ணிக்கை, சராசரியாக, 6.04ஆக உள்ளது.
ஆனால், நம் நாட்டில், ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.இதுவே, பிரிட்டனில், ஒரு லட்சம் பேரில், 63.13 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில், 60.60; இத்தாலியில், 57.19; அமெரிக்காவில், 36.30; ஜெர்மனியில், 27.32; பிரேசிலில், 23.68; ரஷ்யாவில்,5.62 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் குணம் அடைவோர் விகிதத்திலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்டோரில், 56.38 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.