
பெங்களூரில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் சங்கர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ மானிட்டரை அட்வைசரி (ஐ.எம்.ஏ) என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, முதலீடுகளை பெற்று வந்த இந்நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி அளவுக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்சூர் கான் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர். மன்சூர் கானை விடுவிக்க பெங்களூரு முன்னாள் நகர துணை கலெக்டரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பி.எம்.விஜய் சங்கர், ரூ.1.5 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விஜய் சங்கர் மீது விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கர்நாடக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் விஜய் சங்கர் தமது இல்லத்தில் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக திலக் நகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து பெங்களூரு நகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் கூறுகையில், ‛விஜய் சங்கர் மரணத்தை சந்தேகத்துக்கிடமான மரணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட விசாரணையில் தான் தகவல்கள் தெரிய வரும்,' என்றார்.