Type Here to Get Search Results !

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் ஊரடங்கு

தேனியில் அத்தியாவசியப் பொருட்கள் ...

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில், (தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர், போடி) ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே பெரியகுளம் நகராட்சியில் கடந்த 20ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பாளையத்தில் ஊரடங்கு அமலில் இல்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்களான பழங்கள், பால், குடிநீர், சமையல்வாயு, மருந்து பொருட்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரக்கட்டுப்பாடுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவகாரணங்களுக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மத்திய மாநில அரசு அலுவலகங்கள், பொது விநியோக கடைகள், இறைச்சிக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் டீக்கடைகள், பேக்கரிகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், மொபைல் கடைகள், பேன்ஸி ஸ்டோர், பர்னிச்சர் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தவறும் பட்சத்தில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு பஸ்கள் இயங்காது. பழனி மற்றும் திண்டுக்கல் வழித்தடங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.