
கல்வான் பள்ளத்தாக்கில் மோதலையடுத்து, உத்தரபிரதேசத்தில் வீடுகளில் இருக்கும் சுமார் 15 ஆயிரம் சீன மின்சார மீட்டர்கள் அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவத்தால் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பலதரப்புகளை சேர்ந்தவர்களும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் வர்த்தகர்களின் அமைப்பு போராட்டமும் நடத்தியது. இதனையொட்டி, உத்தரபிரதேசத்தில் மாநில அரசு, சீனாவின் மின்மீட்டரை நிறுவ தடை விதித்துள்ளது. சீன மின்சார மீட்டர், உபகரணங்கள் மற்றும் ஆர்டர்கள் , கடந்த ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் குறித்த விபரங்களும் தெரிவிக்கப்படுவதாக அதிகாரி கூறினார்.
இந்நிலையில் உ.பி.,யின் கோரக்பூர் மாவட்டத்தில் வீடுகளில் பொருத்தப்பட்ட சுமார் 15 ஆயிரம் சீன மின்சார மீட்டர்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் மின்சார மீட்டர்களில் 1.50 லட்சம் இணைப்புகளில் 10 சதவீதத்தின்படி, சுமார் 15,000 மின்சார மீட்டர்களை அகற்றவும், ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை பொருத்தவும் உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது கொரோனா ஊரடங்கால் பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது சீனாவின் தொடர்ந்து அத்துமீறல்களாலும், அராஜகத்தாலும் சீன மீட்டர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
தற்போது பயன்படுத்தப்பட்ட சீன உபகரணங்கள் மலிவானவை என்பதால் சீனாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. சீன உபகரணங்களின் தரம் நன்றாக இல்லை என்பது உண்மைதான். மேலும் இந்த பணிகளுக்கு கார்ப்பொரேஷன் அனுமதி வழங்கியதுடன் முதல் கட்டத்தில், சீன மீட்டர் மட்டுமே மாற்றப்படும். அதுவரை, ஆன்லைன் பில்லிங் முறை மூலம் நுகர்வோரின் பெயர் முகவரி மீட்டர் எண்ணுக்கு ஏற்ப குறிக்கப்படும். நகர்ப்புற மீட்டர் சோதனை பிரிவின்படி, உ.பி.,யில் பன்சத்பூர், துர்க்மன்பூர், புராணி கோரக்பூர், முப்திபூர், பெனிகஞ்ச், ஜாஃப்ரா பஜார், கோகா டோலா, மிர்சாபூர் கோடியானா டோலா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் இணைப்புகளில் சீன மீட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷைலேந்திர துபே இந்த முடிவை வரவேற்றுள்ளார்.