
சிறப்பு எஸ்.ஐ., வில்சனை கொலை செய்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, 'சிம் கார்டு'கள் வாங்கி கொடுத்த, 12 பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர், வில்சன், 57. இவர், இந்தாண்டு, ஜனவரி, 8 இரவு, அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, தவுபீக், 28; அப்துல் சமீம், 32, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, மொபைல் போன்களுக்கு, சிம்கார்டுகள் வாங்கி கொடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, பச்சையப்பன்(37), சென்னையை சேர்ந்த, ராஜேஷ்(34), சேலத்தை சேர்ந்த அன்பரசன் (27), அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனீப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது ஜயீத்(24), இஜாஸ் பாஷா(46), ஹூசைன் ஷெரீப்(33), மெகபூப் பாஷா (48) மற்றும் கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன்(52) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்று, பச்சையப்பன் உள்ளிட்ட, 12 பேர் மீது, சென்னை, பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.