
வேகமாக பரவும் கொரோனா தொற்றை தவிர்க்க மதுரையில் முழு ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா தீவிரத்தை உணர்ந்து ஜூன் 30 நள்ளிரவு வரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மக்கள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டியதால் நேற்று வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அடுத்தவர்கள் மூலம் தொற்று பரவுவதால் ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவசர தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கலெக்டர் வினய் கூறியதாவது: ஊரடங்கில் காய்கறி, மளிகை கடை, பெட்ரோல் பங்குகள் விதிகளுக்குட்பட்டு காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை செயல்படும். நடமாடும் காய்கறி, பழங்கள் கடைகள் அதே நேரம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வோர் வாகனங்களை பயன்படுத்தாமல் அருகில் ஒன்றரை கி.மீ.,க்குள் பொருட்களை வாங்க வேண்டும். மாட்டுத்தாவணி, பரவை மார்க்கெட்கள் இயங்காது. மீன், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அணுகலாம், என்றார்.
போலீசார் எச்சரிக்கை
போலீசார் தெரிவித்துள்ளதாவது: காய்கறி, மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளவும். தினமும் கடைக்கு செல்வதால் நோய் எளிதில் தொற்ற வாய்ப்புள்ளது. கூட்டம் அதிகம் உள்ள கடை, சந்தையில் தொற்று அதிகம் பரவி வருகிறது. அந்தந்த பகுதிக்குள் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம். மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், கொள்ளை நோய் தடுப்புச்சட்டம், பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.