Type Here to Get Search Results !

எல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்? சீன அதிபர்

இந்தியா செல்லும் சீன சுற்றுலா ...

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டுமாம். அது போல, ஒரு பிரச்னையை மறக்கடிக்க செய்ய, மற்றொரு பிரச்னையை கையில் எடுப்பது தான் அரசியல். அந்த அரசியலையே, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், அவருடைய சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது செய்கின்றன.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால், உலக அளவில் சீனாவுக்கான மதிப்பு குறைந்து வருகிறது. இதனால், உலகின் உற்பத்தி மையமாக விளங்கும் சீனா, தன் பொருட்களை, மற்ற நாடுகளில் விற்க, கடுமையாக போராட வேண்டியிருக்கும். இது ஒரு புறம் இருக்கையில், சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கூட்டம், இம்மாதம், 22ல் துவங்கியுள்ளது. அதில், கொரோனா வைரஸ், பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

ஆலோசனை கூட்டம்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசியல், பொருளாதார, வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவே, இந்தக் கூட்டம் நடக்கிறது. இதைத் தவிர, அரசுக்கு அரசியல் ஆலோசனை வழங்கும், மக்கள் ஆலோசனை மன்றத்தின் கூட்டமும் நடக்கிறது.கடந்த, 1949ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி, மோசமான நெருக்கடியை சந்தித்ததில்லை. தற்போது, மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை நாடு சந்திக்கிறது. இது தொடர்பாக, இந்தக் கூட்டங்களில் கண்டிப்பாக விவாதிக்கப்படும்.சீன ராணுவத்தின் தலைவராகவும் ஸீ ஜின்பிங் உள்ளார். அவருக்கு தற்போதைக்கு அரசியல் சிக்கல் ஏதும் இல்லை.ஆனால், தனக்கு எதிராக, ஒரு சின்ன முனகல் கூட இருக்கக் கூடாது என, அவர் நினைக்கிறார்.அதனால், பொருளாதார பாதிப்பு குறித்து, இந்தக் கூட்டங்களிலோ, மக்களிடமோ அதிருப்தி ஏற்படுவதை தடுக்க அவர் கையாண்டதே, தற்போதைய ராணுவ நடவடிக்கை.

உள்நாட்டு பொருளாதார பிரச்னை, ஹாங்காங் மற்றும் தைவான் பிரச்னைகளில் இருந்து மக்களையும், உலக நாடுகளையும் திசை திருப்ப வேண்டும்; தெற்காசியாவில் இந்தியா வளர்ந்து வருவதையும் தடுக்க வேண்டும்.அதனால், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துக்கு எதிராக இந்தியா உள்ளது போல் சித்தரிக்க, ஜின்பிங் முயன்றுள்ளார். அவர் கையசைவுக்கு ஏற்ப, பாகிஸ்தான், நேபாள பொம்மைகளும் தலையாட்டியுள்ளன.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு கேள்விக் குறியாக உள்ளது. அந்த நேரத்தில், உலகின் மிகப் பெரிய சந்தையான இந்தியா தான், சீனாவின் இலக்கு. ஆனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடு.இதைத் தவிர, சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில், கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதில், இந்தியாவும் ஒன்று. அதனால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனை, ஜின்பிங்கின் மூளையில் திடீரென உதித்து உள்ளது.

ஜின்பிங்கின் இந்த முயற்சி, ஏதோ புதிய சிந்தனை எல்லாம் இல்லை. இது வழக்கமான, சீனாவின் பழைய பார்முலா தான்.அதை துாசி தட்டி, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, கொஞ்சம், 'பாலிஷ்' செய்துள்ளார் ஜின்பிங்.கடந்த, 1962ல், சீனாவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அதிபராக இருந்த, மாவோ ஜெடாங்கின் மோசமான திட்டங்களால், அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அதை மறைக்க, நம் எல்லையில் பிரச்னையை உருவாக்கினார். அதேபோல், 1979ல் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிபராக இருந்த டெங்க் ஜியோபிங், வியட்நாம் போரின் மூலம், விவகாரத்தை திசை திருப்பினார். தற்போது அதுபோன்ற ஒரு முயற்சியை, ஜின்பிங் மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

சிறந்த நடவடிக்கை

லடாக்கில், நம் எல்லையில், டார்பக் - ஷியோக் - டி.பி.ஓ., சாலையை இந்தியா அமைத்துள்ளது. இது, நம் ராணுவத்தை, எல்லைப் பகுதிக்கு விரைவாக அனுப்ப, பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டாலும், இரு நாடுகளும் போருக்கு தயார் இல்லை. இது இந்தியாவை மிரட்டிப் பார்க்கவும், உள்நாட்டில் அதிருப்தியை சமாளிக்கவும், ஜின்பிங் போட்டுள்ள முகமூடி. வரும், 28ம் தேதி வரை, தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் நடக்கிறது. அதுவரை, இதுபோன்ற பூச்சாண்டி காட்சிகள் நடக்கும்.ஆனால், நிரந்தரப் பிரச்னைக்கான ஒரே தீர்வு, வூஹான், மாமல்லபுரம் சந்திப்பு போல், மோடி - ஜின்பிங் இடையே மற்றொரு மனந்திறந்த பேச்சின் மூலமே ஏற்பட வாய்ப்புள்ளதாக, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.