
'மெக்சிகோவில் கொரோனா ஊரடங்கால், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம். இதை ஈடு செய்ய, இனி வரும் நாட்களில், 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்' என, மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.
'மெக்சிகோவில் இதுவரை, 68,000 பேர் கொரோனா வைரசாஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7,394 பேர் உயிரிழந்துள்ளனர்' என, ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளதாவது:
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவல் குறைந்தாலும், அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் இடம்பெறதா அத்தனை வர்த்தகமும் முடங்கியுள்ளன. இது, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது.
மில்லியன் கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகள் முடங்கினாலும், இனி வரும் நாட்களில் புதிதாக, 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மக்களின் பொருளாதார நிலை மேம்படும்; நாடும் பொருளாதார சிக்கலில் இருந்து தப்பும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.