
விமானத்தில் நடுப்பகுதி இருக்கைகளில் ஜூன் 6 வரை மட்டுமே அமரவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் ஏர் இந்தியா விமானி தேவன் கனணி, மும்பை உயர்நீதிமன்றத்தில், ‛கடந்த 22ம் தேதி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விமானத்தில் நடுப்பகுதி இருக்கையை நிரப்பாமல் இயக்க வேண்டும் அறிவித்திருந்தது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் போது நடுப்பகுதி இருக்கையில் பயணிகள் அமரவைக்கப்பட்டார்கள்,' என மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், அதுவரையில் நடுப்பகுதி இருக்கையை நிரப்ப தடையும் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தன. இதனை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் விசாரித்தது. அப்போது, சமூக விலகல் இல்லாமல் அமர்ந்தால் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் உள்ளதாக பாப்டே கூறினார். இதற்கு அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‛வரும் ஜூன் 6ம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது. நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டது,' என பதிலளித்தார்.
இதனையடுத்து, ஜூன் 6ம் தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தின் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமர வைத்துக்கொள்ளலாம். அதன்பின், முன்பதிவில் நடுப்பகுதி இருக்கையை காட்டக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.