அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டங்களை வகுக்கும் குழுவில் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி, திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 4.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக பதிவானது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது தான் குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதனிடையே நியூயார்க் மாகாண கவர்னர் கியூமோ வெளியிட்ட அறிவிப்பில், ' நீல ரிப்பன் கமிஷனின் தலைவராக முன்னாள் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ஸ்மிட் நியமிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவதை மேம்படுத்துவது மற்றும் பிராட்பேண்டு சேவை மூலம் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து இவரது தலைமையிலான குழு கவனம் செலுத்தும்' என தெரிவித்தார்.
15 பேர் கொண்ட கமிஷனில் சித்தார்த்தா முகர்ஜி , திரிபாதி மற்றும் ராக்பெல்லர் பவுண்டேஷன் தலைவர் ரிச்சர்டு பார்சன்ஸ், போர்டு பவுண்டேசன் தலைவர் டேரன் வாக்கர் மற்றும் கார்னெல் பல்கலை தலைவர் மார்த்தா பொல்லாக், ஐ.பி.எம் தலைவர் ஜின்னி ரோமெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் பிறந்த சித்தார்த்தா முகர்ஜி, ஒரு ஹீமாட்டாலஜிஸ்ட் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மருத்துவ உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 2011ல் 'தி எம்பரர் ஆப் ஆல் மாலடிஸ்: பயோகிராபி ஆப் கேன்சர்' என்ற புத்தகத்திற்காக புலிட்சர் விருதை வென்றவர் ஆவார்.
மற்றொரு இந்தியரான திரிபாதி, நியூயார்க் பல்கலையில் உள்ள பப்பலோ பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ளார். பனாரஸ் இந்து பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த திரிபாதி, மூன்று முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். டொரோன்டோ பல்கலையில் கணினி அறிவியல், அல்பெர்டா மற்றும் பனாரஸ் இந்து பல்கலையில், புள்ளியியலில் பட்டம் பெற்றுள்ளார்.
பல்கலை இணையதளத்தில் உள்ள சுயவிவரத்தின்படி, தேசிய உயர் கல்வி சமூகத்தில் ஒரு தலைவராக உள்ள திரிபாதி, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏ.ஏ.யு) மற்றும் ஏ.பி.எல்.யூ ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றி வருகிறார்.கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து கற்றுகொண்ட பாடங்களில் அடிப்படையில், பொருளாதார மீட்டெடுப்பது எப்படி என ஸ்மிட் குழு ஆராயுமென கியூமோ தெரிவித்தார்.