திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை கடந்த சில நாட்களுக்குமுன் நிரம்பியது. உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நேற்று காலையில் அணைக்கு நீர்வரத்து 5,263 கன அடியாக இருந்தது. இதனால் அணை மீண்டும் நிரம்பியது. அணையிலிருந்து 2,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் காலையில் 142.50 அடியாக இருந்தது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 111.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,618 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 145.08 அடியாகவும், 49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணையில் நீர்மட்டம் 28 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 25 அடியாகவும், 22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையில் 10.62 அடியாகவும் நீர்மட்டம் இருந்தது. மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்- 95, சேர்வலாறு- 97, மணிமுத்தாறு- 67, நம்பியாறு- 3, கொடுமுடியாறு- 20, அம்பாசமுத்திரம்- 77, சேரன்மகாதேவி- 22, நாங்குநேரி- 25, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 10.50, ராதாபுரம்- 19.
அருவிகளில் வெள்ளம் குறைந்தது
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 30.60 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 30 மி.மீ., சங்கரன்கோவிலில் 29, சிவகிரியில் 28, தென்காசியில் 25, கருப்பாநதி அணையில் 17, குண்டாறு அணையில் 13 , ராமநதி அணையில் 8 , செங்கோட்டையில் 7, அடவிநயினார் அணையில் 5 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 81 அடியாக இருந்தது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.32 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 77.25 அடியாகவும் இருந்தது. குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று காலையில் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக் கப்பட்டனர்
AthibAn Tv