இந்திய விமானப்படை எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் அளவிற்கு நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த மோதல்கள் இரு நாடுகளுக்கிடையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 8-ம் திகதி நடைபெற இருக்கும் இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தினையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.எஸ் பதாரியா, மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், சீனா இந்தியாவின் பலத்தினை வெல்ல முடியாது என்றும், அதே நேரத்தில் எதிரியின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அசாதாரண சூழல் ஏற்படுமாயின் அதை எதிர்கொள்ள போதுமான பலத்துடன் விமானப்படை தயாராக உள்ளது என்றும், புதியதாக விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களும் படையின் பலத்தினை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்னை குறித்து முன்னதாக இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 12-ம் திகதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
இந்தியா ஏற்கெனவே லாடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தனது ராணுவ துருப்புக்களையும், கனரக வாகனங்களையும் நிலைநிறுத்தியுள்ளது. மேலும், சுகோய் 30 எம்.கே.ஐ, ஜாகுவார் மற்றும் மிராஜ் ரக விமானங்களையும் சர்ச்சைக்குரிய பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது.
நிலை நிறுத்தப்பட்டுள்ள விமானங்களை கொண்டு இந்திய விமானப்படை எல்லைப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
கடைசியாக கடந்த செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற இரு நாட்டு ராணுவ தலைவர்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையில், தற்போதைய பதற்றமான நிலைமையை தீவிரமாக்கும் எந்த நிகழ்வுகளையும் இரு நாடுகளும் மேற்கொள்ளக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
AthibAn Tv