எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெறுவது குறித்து இந்திய - சீன அதிகாரிகள் அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சு நேற்று துவங்கியது.எல்லையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது;
இதற்கு நம் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சு லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று துவங்கியது. நம் தரப்புக்கு லெப்.ஜெனரல் ஹரீந்தர் சிங்கும் சீனாவுக்கு மேஜர் ஜெனரல் லியு லின்னும் தலைமை வகித்தனர்.முதல் முறையாக இந்த பேச்சின் போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.
சமீபத்தில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ரஷ்யாவில் நடந்த பேச்சின் போது 'எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.இதன் அடிப்படையில் நேற்றைய பேச்சு நடந்தது. இந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டால் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாடுகளின் படைகளும் வாபஸ் பெறப்பட வாய்ப்புள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
AthibAn Tv