உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியான ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குச்சாவடி 62 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகள் அடங்கும்.
மண்டி தொகுதி ஏற்கனவே நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த தொகுதியில் பாஜக சார்பில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகிறார்.
அதேபோல், உலகிலேயே மிக உயரமான வாக்குச் சாவடியைக் கொண்டிருப்பது மண்டி தொகுதியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பனி படர்ந்த இமயமலையில் 15,256 அடி உயரத்தில் தாஷிகாங் என்ற சிறிய கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியே உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியாக கருதப்படுகிறது.
தாஷிகாங் மற்றும் பக்கத்து கிராமமான கெடே ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த 62 வாக்காளர்களுக்காக மட்டுமே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தாஷிகாங் கிராமம் சீனாவின் எல்லையில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
நீண்டகாலமாக தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய போதிலும் தமது வாழ்க்கைத் தரமும் அடிப்படை வசதிகளும் இன்னும் முன்னேற்றமடையவில்லை என இரு கிராம மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பாழடைந்த மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு, தண்ணீர், சாலை போன்ற அத்தியாவசிய வசதிகள் இன்னும் இல்லை.
இப்பகுதி ஒரு அரை வறண்ட பகுதியாகும், ஆண்டுக்கு மிகக் குறைந்த அல்லது மழை பெய்யாது. அதனால் அவர்கள் குடிநீருக்காக பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறைகளையே சார்ந்துள்ளனர்.
ஆனால் பருவநிலை மாற்றத்தால் சமீப காலமாக பனிப்பொழிவு குறைந்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் சிறு குட்டைகள் மூலம் மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
வேலை வாய்ப்பு இல்லாததால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் கடினமாக இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.
அந்த பகுதிகளில் பட்டாணி அதிகளவில் விளைகிறது. ஆனால், அதன் விளைச்சல் உணவு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என கண்ணீர் வடிக்கின்றனர்.
இங்கு அரசியல்வாதிகள் அடிக்கடி வருவதில்லை என்று கூறிய கிராம மக்கள், தேர்தல் நேரத்தில் வரும் தலைவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில் வாக்களிப்பதாக கூறியுள்ள அவர்கள், இந்த தேர்தலிலும் வாக்களிக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களின் நீண்ட நாள் கனவு இந்த தேர்தலிலாவது நிறைவேறுமா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.