Type Here to Get Search Results !

அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கான வரைபடம், அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிப்பு


உத்தர பிரதேசத்தில், ராமஜென்ம பூமி வழக்கில், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்ட தனியாக, 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரவிட்டது.ராமஜென்ம பூமி பகுதியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் உள்ள தானிப்பூர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு, முஸ்லிம் வக்பு வாரியத்திடம் வழங்கியது.

இந்த மசூதியை கட்ட, இந்தோ - -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை முஸ்லிம் வக்பு வாரியம் அமைத்தது.இந்நிலையில், மசூதி கட்டுமானத்திற்கான வரைபடம், அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக நேற்று சமர்ப்பிக்கப் பட்டது. ஒரே நேரத்தில், 2,000 பேர் வரை அமரும் வகையில், போதுமான இடத்துடன் இந்த மசூதி கட்டப்பட உள்ளது.

இதனுடன், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையும், சமூக சமையல் கூடம் ஒன்றும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. நம் நாட்டை கட்டமைக்க, முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் ஆய்வு கூடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது.