
“எல்லைப் பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசை திருப்பும் முயற்சிகளில், இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது,” என, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், உளவு பார்த்ததாக, இந்திய அரசு, சமீபத்தில் குற்றஞ்சாட்டியது. இதற்கு பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை கடத்தி, பாகிஸ்தான் சித்ரவதை செய்தது. இந்தியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை விடுவித்தது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க, இந்திய அரசு முடிவு செய்தது. அதேபோல், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும், பாதியாக குறைக்குமாறு, பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இருக்கும் எல்லைப் பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசைத் திருப்பவே, இந்திய அரசு, இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதற்கு பதிலளிக்க முடியாமல் அரசு உள்ளது.
இந்தியாவில், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எங்கள் மீது பொய் பழி சுமத்துவதை, இந்தியா நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.