Type Here to Get Search Results !

'ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விஷயத்தில், டிரம்ப், இந்தியா மீது கருணையே காட்டாமல் மிகவும் பிடிவாதமாக உள்ளார்

Iran oil waiver: Trump's decision to let India continue imports is ...

 'ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விஷயத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது கருணையே காட்டாமல் மிகவும் பிடிவாதமாக செயல்பட்டார்' என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு இவரை, அந்த பதவியிலிருந்து நீக்கினார். இந்நிலையில், அதிகாரியாக பணியாற்றியபோது நடந்த நிகழ்வுகளை தொகுத்து, 'தி ரூம் வேர் இட் ஹேப்பண்ட்' என்ற தலைப்பில், ஜான் போல்டன் புத்தகமாக எழுதியுள்ளார்.

அதில், இந்தியா தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது: 'மேற்காசிய நாடான ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. இதை மீறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், இதை நிறுத்தி விட்டு வேறு நாட்டிடம் வாங்கினால் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பரிசீலித்த அமெரிக்க அதிகாரிகள், இந்தியா தரப்பில் கூறப்பட்ட நியாயத்தை உணர்ந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப், பிடிவாதமாக இருந்தார். அவர், இந்தியா மீது கருணையுடன் செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்தியா தரப்பின் நியாயத்தை போம்பியோ கூறினார். டிரம்ப், அதை பொருட்படுத்தவில்லை. 'ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காமல், மோடி சமாளித்துக் கொள்வார்' என, அலட்சியமாக கூறி விட்டார். இவ்வாறு, அதில் எழுதியுள்ளார்.