
வங்கிக் கடன் மோசடியில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, நீதிமன்ற காவலை, ஜூலை, 9ம் தேதி வரை நீட்டித்து, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதைதிருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர்.
ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்த ஆண்டு, மார்ச் மாதம், லண்டனில் பிடிபட்டார். அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார், 'வான்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில், இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள, 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றத்தில் நடக்கிறது.
கடந்த மாதம், முதற்கட்ட விசாரணை முடிந்தது. அடுத்த கட்ட விசாரணை, செப்டம்பர், 7ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பது தொடர்பான விசாரணை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறையில் இருந்தபடி, நிரவ் மோடி ஆஜரானார். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸி, நிரவ் மோடிக்கான நீதிமன்ற காவலை, ஜூலை, 9 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.