
கொரோனா ஊரடங்கால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் லட்சக் கணக்கான இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர். பாதுகாப்பாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் லட்சக் கணக்கான இந்தியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும், பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த ஊர் வந்தடைந்தனர். வந்தே பாரத் விமானங்கள் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தால் ஏர் இந்தியா மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர் என மத்திய அரசு அறிவித்தது. ஜூன் 18 ல் துபாயில் இருந்து ஒரு விமானம் 188 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. மேலும் 171 பயணிகள் மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு வந்திறங்கினர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிறப்பு விமானங்களை இயக்கி சிங்கப்பூரிலிருந்து 179 இந்தியர்களை அழைத்து வந்துள்ளது. மற்றுமொரு விமானம் மாலே வேலனா விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு 170 பயணிகளை அழைத்து வந்தது. மேலும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயமாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கேனர் மூலமாகவோ அல்லது மற்ற வெப்பமானி கருவிகள் மூலமாக பயணிகளின் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, மாதிரிகள் பரிசோதிக்கப்படும். பின் தனிமைப்படுத்துதல் அடிப்படையில் 7 நாட்கள் தங்க வேண்டும். பின் அடுத்தகட்டமாக பரிசோதிக்கப்பட்டு அவர்களது வீடுகளில்7 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.