
கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணக் கட்டணம் முழுவதையும், முன்பதிவு செய்தோருக்கு வழங்குவது குறித்து, மத்திய அரசும், விமான நிறுவனங்களும் இணைந்து முடிவெடுக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்'பிரவாசி லீகல் செல்' என்ற தனியார் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, முன்பதிவு செய்த பணத்தை திரும்பத் தருமாறு, பயணியர் கோரினர்.ஆனால், விமான நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தன. இது, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, விமான நிறுவனங்கள், முழு கட்டணத்தையும் திரும்பத் தர உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவில், ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகை தர வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, ஊரடங்கிற்கு சில நாட்களுக்கு முன்பதிவு செய்தோருக்கு, குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விமான நிறுவனங்கள், முழு பணத்தையும் திரும்பத் தராமல், ஓராண்டு வரை, அத்தொகையில் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளன.
பயணியரின் உரிமை
இது, பயணியரின் உரிமையை பறிப்பதாக உள்ளது. அத்துடன் ஊரடங்கிற்கு முன், பின் என்ற பாகுபாட்டிற்கும் வழி வகுப்பதாக உள்ளது.எனவே, விமான டிக்கெட் பதிவு செய்த அனைவருக்கும், முழு தொகையை திரும்பத் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசும், விமான நிறுவனங்களும் கூடிப் பேசி, முன்பதிவு செய்த அனைவருக்கும் முழு பணத்தை திரும்பத் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என, அமர்வு உத்தரவிட்டது.