
உள்நாட்டு தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் பலவும் இந்தியாவிடம் ஏற்றுமதி செய்ய வலியுறுத்தின. இந்தியாவின் தேவைக்காக அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. உலக நாடுகள் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. இதற்காக உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு, உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நாட்டில் தற்போது, 200 மி.கி., திறன் கொண்ட 30.66 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், உள்நாட்டு சந்தை தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.