
இ.எஸ்.ஐ கார்ப்பரேஷனில் நடந்த ரூ.150 கோடி மோசடி தொடர்பாக தெலுங்கு தேசம் எம்எல்ஏ., அச்சம்நாயுடு மாநில ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரியில், காப்பீட்டு மருத்துவ சேவைகள் இயக்குநரகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ரூ 975 கோடிக்கு மேல் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கொள்முதல் செய்வதில் பெரும் மோசடி நடந்ததாக விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத் துறைக்கு அறிவித்திருந்தது. இந்த ஊழலில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், நெருங்கிய முன்னாள் அமைச்சருமான கே.அச்சம் நாயுடு முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவர் தொழிலாளர் அமைச்சராக இருந்தார்.
திறந்த டெண்டர்களை அழைக்காமல், டெல் ஹெல்த் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு பணி ஆணைகளை வழங்குமாறு அச்சம் நாயுடு அப்போதைய ஐ.எம்.எஸ் இயக்குநருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அச்சம் நாயுடு மறுத்துள்ளார். இதற்கிடையில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நிம்மாடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்எல்ஏ., கைது சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பாகி உள்ளது.