உ.பி., மாநிலத்தவர்களை வெளி மாநிலங்கள் பணியில் அமர்த்துவதற்கு முன்னர், உ.பி., அரசின் அனுமதியை பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: உ.பி., மாநில தொழிலாளர்களுக்கு மாநிலத்திற்குள்ளேயே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கமிஷன் ஒன்றை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வேறு மாநிலங்களுக்கு எங்கள் தொழிலாளர்கள் தேவைப்பட்டால், அங்கு செல்லும் தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். அதேநேரத்தில், பிற மாநிலங்களில் எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதனால், உ.பி., மாநில அரசின் அனுமதி இல்லாமல், எங்கள் மாநில தொழிலாளர்களை வெளிமாநிலங்கள் வேலைக்கு அழைக்க முடியாது. இங்கிருந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.