நான்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பாஜ., மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் சமூக வலைதளத்தில் உரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தியாவில் 14 தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கு வந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும்.
தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை நீண்ட காலமானது என்பதால், கொரோனா வைரசுக்கு விரைவிலேயே தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது. எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும். எனவே, தடுப்பூசி அல்லது சிகிச்சையை கண்டறியும் வரையில், சமூக விலகல், மாஸ்க் அணிவது, கை மற்றும் உடல் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். அதுவே நோய்க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. இவ்வாறு அவர் பேசினார்.