சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது விலகல் பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தொலைக்காட்சிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறுகையில், கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். மேலும், அரசியலிலிருந்து தான் விலகப்போவதாக கடிதமும் எழுதினார்.
பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினார். அதை நடராஜன் கைப்பற்றி வைத்திருந்தபோது, அதை கண்டுபிடிக்க போலீஸ் சோதனையும் நடைபெற்றது. பின்னர் சில காலங்களில் ஜெயலலிதா தனது முடிவை மாற்றி மீண்டும் அரசியலில் பயணிக்கத் தொடங்கினார்.
எனவே. சசிகலா இப்போது எடுத்துள்ள இந்த முடிவுகள் எல்லாம் அவ்வப்போது மாறக்கூடியவை. ஒருவேளை திமுக வெற்றிபெற்றுவிட்டால் அந்த பழி தன்மீது வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் சசிகலாவுக்கு இருக்கலாம். அதனால் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், தற்போது திமுக, அதிமுக கூட்டணிகள் வலுவாக இருக்கின்றன. ஒருவேளை அங்கு சலசலப்பு ஏற்பட்டால், சில கட்சிகள் சசிகலா இல்லாத அமமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வரலாம் என்பது அவருடைய எண்ணமாக இருக்கலாம்.
ஒருவேளை தேர்தலுக்கு பின்பு இந்த முடிவு மாறலாம். அப்போது அதிமுகவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றும் மேலும் தேர்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் சசிகலாவின் திட்டங்கள் தள்ளிப்போயிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
AthibAn Tv