வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. அதை ஏற்றுக்கொண்ட அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது. மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதனையடுத்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பாமக முகாமில் மகிழ்ச்சி கரைபுரள்கிறது. சொன்னப்படி சாதித்ததாகவும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் தேர்தலை எதிர்கொள்ளவும் பாமக - அதிமுக தயாராகிவருகிறது. இந்நிலையில் இதுபற்றி பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது டாக்டர் ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றியாகும். இந்த அறிவிப்புக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று (பிப்.27) அறிவிப்பார்” என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.
AthibAn Tv