எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு பாதையாத்திரை செல்லும் பாரம்பரிய நிகழ்வு, நிகழ்வாண்டில் தொடங்கியது.
கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக, எடப்பாடி சுற்றுப்பகுதியினை சோர்ந்த பெரும் திரளான முருக பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு நடைபயணம் மேற்கொள்ளுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழ் ஆண்டில், எடப்பாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த வன்னியகுல சத்திரியர் காவடிக்குழு,
பருவதராஜகுல காவடிக்குழு, தாசர் காவடிக்குழு, மேட்டுத்தெருக் காவடிக்குழு மற்றும் சித்தூர் அனைத்து சமுதாயக் காவடிக்குழு, புளியம்பட்டிக் காவடிக்குழு உள்ளிட்ட பல்வேறு காவடிக்குழுவினர். எடப்பாடியிலிருந்து நடைபயணமாக, காவடி சுமந்து பழனிக்கு புறப்பட்டனர்.
முன்னதாக சனிக்கிழமை மாலை சித்தூர் அனைத்து சமுதாய பொதுமக்கள் சார்பில், சித்தூர் அம்மன்கோயில் பகுதியில் தொடங்கிய காவடி பாதையாத்திரையினை தொடர்ந்து, கல்யாணசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குபின் பக்தர்கள் பழனி பாதையாத்திரை மேற்கொண்டனர்.
பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபயணமாக, செங்கமாக முனி ஆலயம், பள்ளியபாளையம் காவிரி நதிக்கரை, ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் ஆலயம், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகில் உள்ள வட்டமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய உள்ளனர்.
எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு காவடிக்குழுக்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இப்பாரம்பரிய பாதையாத்திரையில் கலந்துகொண்டு சுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்த உள்ளனர்.
AthibAn Tv