சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் இருந்த சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அதே மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் இன்று(ஜன. 31) காலை 11.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 11 நாள்கள் அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாள்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் சில நாள்கள் பெங்களூருவில் தங்கி ஓய்வு பெற்று வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். இதில் சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா, சிறைக்குச் சென்ற பின்னர் அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். சசிகலா பொதுச் செயலாளராக உள்ள அமமுக என்ற டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி உள்ள நிலையில், அவரது காரில் அதிமுக கொடி இடம்பெற்றுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AthibAn Tv