இந்த ஆண்டின் முதல் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும் போது, உங்களோடு, உங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நமது சிறுசிறு உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள் வாழ்க்கையின் வளமான அனுபவங்கள், நிறைவான வாழ்க்கை வாழும் உத்வேகத்தை அளிப்பது என்பதன் பெயர் தான் மனதின் குரல்.
வெளிநாடுகளில் வாழும் தனது பல நண்பர்களும் , இந்தியாவிற்கு தங்கள் நன்றிகளை தனக்கு செய்தி அனுப்பி தெரிவித்துள்ளதாக மதுரையை சேர்ந்த கீர்த்தி என்பவர் ‛நமோ' செயலியில் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிற நாடுகளுக்கு உதவி செய்தது, இந்தியா பற்றி அவர்களின் மனங்களில் மரியாதையை அதிகரிக்க செய்துள்ளது என்று அவர்கள் தனக்கு செய்தி மூலம் தெரிவித்துள்ளதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். நாடு பாராட்டப்படுவதை கண்டு, மன் கி பாத் நேயர்களும் பெருமைப்படுவார்கள்.
மனித நேயத்திற்காக பங்களித்தவர்கள்,சாதனையாளர்கள், சிறந்த பணியாற்றியவர்கள் பத்ம விருது மூலம் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தும் நல்ல செய்தி வந்துள்ளது. நமது கிரிக்கெட் அணி, துவக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களுக்கு பிறகு, அதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றுள்ளது. நமது வீரர்களின் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், குடியரசு தினத்தன்று மூவர்ண கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. வேளாண் துறையை நவீனமாயமாக்க அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகள் தொடரும். நாம் இனி வரும் காலங்களை நம்பிக்கை புதுமை ஆகியவற்றால் நிரப்ப வேண்டும்.
கடந்த ஆண்டு, அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மனஉறுதியை வெளிப்படுத்தினோம். இந்த ஆண்டும் நாம் நமது கடும் உழைப்பு வாயிலாக நமது உறுதிப்பாடுகளை மெய்ப்பித்து காட்ட வேண்டும். நம்முடைய தேசத்தை விரைவாக, நாம் முன்னேற்றி செல்ல வேண்டும்.
இந்த ஆண்டின் துவக்கத்தோடு, கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தடுப்பூசிகள் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் இருந்தது போல், நமது தடுப்பூசி திட்டமும் உலக நாடுகளுக்கு எடுத்து காட்டாக உள்ளது. மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துடன், உலகிலேயே, மிக விரைவாக நாம், நமது குடிமக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். 15 நாட்களில், இந்தியாவில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 18 நாட்களும், பிரிட்டனில் 36 நாட்களும் ஆனது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, நமது நாட்டின் தற்சார்புக்கு எடுத்துக்காட்டு என்பது மட்டுமல்லாமல்,நமது நாட்டின் சுயகவுரவத்திற்கும் ஒரு உதாரணமாக உள்ளது. பிரச்னையான காலத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது. மருந்து துறையில் தன்னிறைவு பெற்ற இந்தியா, உலக நாடுகளுக்கு உதவி வருகிறது.
இந்தியா 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.1932ம் ஆண்டு பிப்.,15ல் பிரிட்டிஷார், வந்தே மாதரம் என குரல் எழுப்பிய தேச பக்தர்களை இரக்கமின்றி கொன்றனர். வீரமரணம் அடைந்த அந்த தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திரத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக இளைஞர்கள் கட்டுரை எழுத வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவை சேர்ந்த 4 பெண் பைலட்கள், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து பெங்களூருவுக்கு இடையில் எங்கும் நிற்காமல் விமானத்தை இயக்கினர். குடியரசு தினத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2 பெண்கள் சாதனை படைத்துள்ளனர். எந்த துறையாக இருந்தாலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் 30 யோகா பள்ளிகள் உள்ளன. நவ.,4ம் தேதியை தேசிய யோகா தினமாக அந்நாட்டு பார்லிமென்ட் அறிவித்துள்ளது.அந்நாட்டு செனட்டின் துணை தலைவராக உள்ளவர் ரபிந்தரநாத் குயின்டெரோஸ். ரபிந்தரநாத் தாகூர் மீது அவருக்கு பற்று அதிகம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
AthibAn Tv