புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: புதுச்சேரியில் 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மானிய உதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்த மானிய உதவி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.
மேலும், அவர் அமைச்சராக இருந்தபோது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரூ.5 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஆனால், தற்போது புதுச்சேரி முதல்வராக இருக்கும் அவர், எந்தவித கடனையும் தள்ளுபடி செய்யாமல், புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். புதுச்சேரியில் பா.ஜ ஆட்சி விரைவில் மலரும். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உங்களின் (புதுச்சேரி மக்களின்) உற்சாக வரவேற்பை பார்க்கையில் வரும் சட்டசபை தேர்தலில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று புதுச்சேரியில் விரைவில் பா.ஜ., ஆட்சி மலரும் என்பது தெளிவாக தெரிகிறது. வளர்ச்சியும், ஊழலற்ற ஆட்சியையும் புதுச்சேரியில் பார்ப்பீர்கள். புதுச்சேரியில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv