அதிமுகவில் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக இருப்பவர் சுப்பிரமணிய ராஜா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி பணிகளில் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், சசிகலாசிறையில் இருந்து விடுதலையானதை முன்னிட்டு நேற்று முன்தினம் பாளை பகுதிகளில் அதிமுகவை வழி நடத்த வரும் பொதுச்செயலாளரே வருக வருக. வாழ்க வெல்க என குறிப்பிட்டு சசிகலா படம் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டினார். அதிமுக நிர்வாகி ஒட்டிய இந்த போஸ்டர் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், சுப்பிரமணிய ராஜாவை கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதுகுறித்து, சுப்பிரமணியராஜா கூறுகையில்;- அதிமுகவை பொறுத்தவரை சசிகலா முக்கியமானவர். சசிகலாவை உதாசீனப்படுத்தினால் தென்மாவட்டங்களில் 75 தொகுதிகளில் அதிமுக தொற்கும் சசிகலாவோடு கைகோர்த்து அதிமுக இயங்குவதே நல்லது. சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.
தினகரனுக்கும் எங்களுக்கும் பங்காளி சண்டை நாளையே இணைவோம் என அமைச்சரே சொல்கிறார். அத்தகைய அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் சாதாரண தொண்டன் என்பதால் என்னை மட்டும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்குகின்றனர். கூட்டணி கட்சியான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட சசிகலா விடுதலையாவதை வரவேற்கிறார். அவர் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என தெரிவித்தார். அதற்காக கூட்டணியில் இருந்து அவர்களை கழட்டி விட முடியுமா? என்னை பொறுத்தவரை என்னை நீக்கிவிட்டீர்கள்..நாளை லட்சம் பேர் வருவார்கள் இந்த எண்ணிக்கை கோடியாக கூடும் என்ன செய்வீர்கள் என முதல்வர் மற்றும் துணமுதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
AthibAn Tv