Type Here to Get Search Results !

ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தினங்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் : முதல்வர் பழனிசாமி


தமிழக முதல்வர் பழனிசாமி வரும் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தினங்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர்.

தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாமக்கலில் நேற்று தொடங்கினார்.

பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும் முதல்வர் பழனிசாமி ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்.
ஜனவரி 3-ம் தேதி காலை 8 மணிக்கு பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். முதலாவதாக கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து காலை 9 மணி முதல் 9.45 மணி வரை கோவில்பட்டி தொகுதி வில்லிச்சேரியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல், 10 மணி முதல் 11 மணி வரை கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 11.15 மணி முதல் 11.45 மணி வரை கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே சிறு வணிகர்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்.

பின்னர் பகல் 12.15 மணி முதல் 1 மணி வரை விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல், பகல் 1.30 மணி முதல் 2.15 மணி வரை விளாத்திகுளத்தில் மிளகாய் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை ஓட்டப்பிடாரம் தொகுதி புதியம்புத்தூரில் சிறு, குறு வணிகர்களுடன் சந்திப்பு, மாலை 5.15 மணி முதல் 5.45 மணி வரை ஓட்டப்பிடாரத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை தூத்துக்குடி தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் பயணிப்பவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டம், இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை தூய பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடு, 8.45 மணி முதல் 9.30 மணி வரை தூத்துக்குடி டிஎஸ்எப் தங்கும் விடுதியில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், இரவு 9.45 முதல் 10.15 வரை மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

2-ம் நாளான ஜனவரி 4-ம் தேதி மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீவைகுண்டம் தொகுதி கருங்குளத்தில் வேளாண் பெருங்குடி மக்களுடன் கலந்துரையாடல், மாலை 4.45 மணி முதல் 5.15 மணி வரை ஸ்ரீவைகுண்டநாதர் பெருமாள் கோயிலில் தரிசனம் மற்றும் ஆலய வளாகத்தில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல், மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை அடைக்கலாபுரத்தில் விவசாயிகள், கருப்பட்டி- வெல்லம் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மாலை 6.45 மணி முதல் 7.15 மணி வரை திருச்செந்தூர் தொகுதி வீரபாண்டியன்பட்டினத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை தூத்துக்குடி டிஎஸ்எப் தங்கும் விடுதியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இரவு 9.15 மணி முதல் 9.45 மணி வரை உள்ளூர் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கிறார்.

முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளனர். முதல்வரின் பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom