ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை பிரதமர் அலுவலகம் கண்காணித்து வருகிறது. விரைவாக முடிக்க வேண்டிய இந்த திட்டங்களை கண்காணிக்க, செயலர்கள் மட்டத்திலான குழு ஒன்றை பிரதமர் அலுவலகம் அமைத்துள்ளது. இந்த திட்டங்களை தாமதப்படுத்துவதையும், நிறுத்தி வைக்கப்படுவதையும் தடுக்கவும் இந்த குழு நடவடிக்கை எடுக்கும்.
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், சர் தம் இணைப்பு சாலை திட்டம், டில்லி- மீரட் எக்ஸ்பிரஸ்வே, புதுடில்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பு திட்டம், புனே மெட்ரோ ரயில் திட்டம், மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக திட்டம், நவி மும்பை சர்வதேச விமான நிலைய திட்டம் ஆகியவை அடங்கும். இதில், புதுடில்லி ரயில் திட்டம் தவிர்த்து மற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், இவை அனைத்தும், பெரிய திட்டங்களாக இருப்பதால், அவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சில திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிலம் கிடைக்காதது, சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக சில திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் 2022ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணைகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
AthibAn Tv